Thursday, April 11, 2019

Pancadasi - Chapter1 - Rev-01

பஞ்சதசி
ஸ்வாமி குரபரானந்தா விளக்கம்
அத்தியாயம்-1

முகவுரை:

இது ஒரு பிரகரண கிரந்தம். பிரகரன கிரந்தம் மூன்று வகையாக இருக்கிறது. அவைகள் 1.பரிபாஷா-ஒரு சாஸ்திரத்தில் உள்ள சில கடினமான வார்த்தைகளை எடுத்து விளக்குதல் (தத்துவபோதம்) 2.வேதத்தில் முதலிலிருந்து கடைசிவரையில் உள்ள சாதனங்களை படிப்படியாக தொகுத்து கூறுதல் (விவேகசூடாமணி) 3. சாஸ்திரத்தில் கூறியுள்ள ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு விரிவாக விளக்குதல். (ஜீவன் முக்தி வைராக்கிய சதகம்). (வேதாந்த பரிபாஷா, வேதாந்த சாரம்)
 
பஞ்சதசி இரண்டு விதமான பிரகரண கிரந்தமாக இருக்கிறது. இதில் வேதாந்த விசாரம்தான் அதிகமாக இருக்கிறது. இந்த நூலை மிகக் கவனத்துடன் படிக்க வேண்டும். ஆரம்ப நிலையிலிருந்து இறுதிவரை செல்லும் படிகளை வரிசைக் கிரமமாக பார்க்கலாம்.
 
1.     சாத்திய புருஷார்த்த நிஸ்சயம்: முதலில் ஒரு மனிதன் தீர்மானம் செய்ய வேண்டியது சாத்தியத்தை இறுதி லட்சியத்தை நிச்சயம் செய்தல். அறம் பொருள் இன்பம் வீடுபேறு. பரம புருஷார்த்தம்,  மாறாத லட்சியம் மோட்சம். மற்றவைகள் மாற்றத்திற்குட்பட்டவை. இவைகள் பரம புருஷார்த்தத்திற்கு சாதனங்களாக கருதப்படுகிறது.
2.     சாதன நிச்சயம்: பரம புருஷார்தத்தை அடைவதற்கு உதவும் சாதனத்தை நிச்சயம் செய்ய வேண்டும். ஆத்ம ஞானமே மோட்ச சாத்தியத்தை அடைய உதவும் சாதனமாகும்.
3.     பிரமாண நிச்சயம்: இந்த ஞானத்தை அடைய உதவும் கருவியை நிச்சயம் செய்ய வேண்டும். குரு, வேதாந்தம், விசாரம் ஆகிய மூன்றும் பிரமாணம் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4.     ஆத்ம நிச்சயம்: நான் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
5.     ஆத்ம நிஷ்டா: ஆத்ம ஞானத்தில் நிலைபெறுதல். தன்னிடத்திலே மனநிறைவுடன் இருப்பதுதான் ஞான நிஷ்டா.
 
ஸ்லோகம்-1
எழுதப்போகும் தடையின்றி முடியவும், எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் முதல் ஸ்லோகம் இறைவணக்கமாக இருக்கின்றது.
ஸ்ரீசங்கரானந்த குருவின் பாதங்களுக்கு வணக்கம். ஆத்ம வித்யாவைக் கொடுக்கக்கூடியவரும், நன்மையைக் கொடுக்கக்கூடியவருமான என்றும் ஆனந்தமாக இருப்பவரும் அதைக் கொடுப்பவருமான குருவின் பாதங்களுக்கு வணக்கம். தாமரையைப் போன்ற மென்மையான குரு பாதங்களுக்கு வணக்கம். அறியாமையும், அதன் விளைவாக வருகின்ற துயரங்களையும் நீக்குகின்ற செயலை செய்கின்ற குருவுக்கு வணக்கம். காரியத்துடன் கூடிய அடர்ந்த அறியாமை, மகா அக்ஞானம் என்கின்ற முதலையை விழுங்குகின்ற இந்தவொரு முக்கிய செயலை மட்டும் செய்து கொண்டிருப்பவர். இத்தகைய குரவானவர் உண்மையை உபதேசிப்பதன் மூலம் அடர்ந்த அறியாமையை நீக்குகின்ற முக்கிய செயலை செய்து கொண்டிருப்பவர். ஆறியாமை என்பது ஆத்மாவைப் பற்றிய உண்மையை அறியாத நிலையைக் குறிக்கின்றது. இது துயரத்தை, சம்சாரத்தை காரியமாக கொண்டிருக்கிறது. ஆவரணமும், விக்ஷேபமும் கொண்டிருப்பது.
 
ஸ்லோகம்-2
நிர்மல சேதஸாம் - தூய்மையான மனதை உடையவர்கள்.
ராக துவேஷங்கள்தான் பிரவிருத்தி, நிவிருத்தி ஆகியவைகளுக்கு காரணங்கள்.  இவைகள் நீங்கினால்தான் ஜகத்தின் உண்மையான தோற்றத்தை அறிந்து கொள்ள முடியும். தூண்டில் உள்ள புழுவை போல் உலகம் காட்சியளிக்கிறது. வெளியில் தெரியும் புழுவானது மீனுக்கு ஆசையை தூண்டிவிடும். அதற்குள் இருக்கும் தூண்டிலை அறியாமல் துயரத்தில் மாட்டிக்கொள்ளுவது போல மனிதர்கள் உலகத்தில் துயரப்படுகிறார்கள். கர்மயோகப்படி வாழ்ந்தால், தர்மப்படி வாழ்ந்தால் மனத்தூய்மையை அடையலாம். தேவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் மனத் தூய்மையை அடையலாம். நீரில் மலர்ந்திருக்கும் தாமரை மலர் போன்ற குருவின் இரண்டு பாதங்களையும் வணங்கி வேவை செய்ய வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்துவத்தினுடைய விசாரம் செய்யப்படுகிறது.
 
மனதில் இருக்கும் அறிவுக்கு விவேகம் என்று பெயர். அந்த அறிவை அடைவதற்கு உதவுவது விசாரம். ஆத்மதத்துவம் என்பது ஆத்மாவினுடைய தன்மை, பரம்பொருளினுடைய தன்மையாகும். விவேகம் என்பது பிரித்துப்பார்த்து அறிவை அடைதல். உண்மையையும், அதேப்போன்று தோன்றும் பொய்யை பிரித்து அறிய வேண்டும்.
 
ஸ்லோகம்-3
இதில் மூன்று கருத்துக்கள் விளக்கப்படுகிறது. அவைகள்
1. விழிப்புநிலையில் அனுபவிக்கின்ற விஷயங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருக்கின்றது.
2. அறிவு அறியப்படும் பொருளிலிருந்து வேறுபட்டது.
3. இந்த அறிவு ஒன்றாக இருக்கிறது.
ஓவ்வொரு பொருளுக்கும் தனித்தன்மை இருப்பதால் அவைகள் வேறுபட்டு இருக்கிறது.  எண்ணங்கள் விதவிதமாக தோன்றுவதால் விஷயங்களும் விதவிதமாக இருக்கிறது.
 
விழிப்புநிலையில் சத்தம், தொடுதல் போன்ற அறிவுக்கு விஷயமாக இருக்கின்ற அறியப்படும் பொருட்களானது தத்தம் குணங்களில் வேறுபட்டு இருப்பதால், அவைகளுக்குள் வேற்றுமைகள் காணப்படுகிறது. அறியப்படும் பொருளிலிருந்து அறிவை அடைவதால் அறிவு வேறாக இருக்கின்றது. எனவே அறிவு என்கின்ற ஒரு வஸ்து இருப்பதை அறியமுடிகிறது. ருத்ராட்ச மாலையில் இருக்கின்ற நூலானது ஒன்றாக இருக்கிறது அதேசமயம் ருத்ராட்ச கொட்டைகளுக்கு வேறாக இருக்கிறது. அதுபோல நம்மிடத்தே வந்து போகின்ற அறிவு அனைத்தையும் ஒன்றாக இருக்கின்ற ஆத்மா அறிந்து கொள்கின்றது.
 
ஸ்லோகம்-4
விழிப்புநிலையை போன்று கனவு நிலையிலும் விஷயங்களின் வேற்றுமையும், அறிபவன் ஒன்றாகவே இருக்கும்.
கேள்வி- கனவில் காணும் விஷயங்கள் உண்மையில் இல்லை என்பதால் வேற்றுமை அறிவில்தான் இருக்கிறது.
பதில்-ஜீவன் கனவில் காணும் விஷயங்கள் யாவும் அவனால் படைக்கப்படுகின்றது. எனவே கனவில் வரும் விஷயங்களில்தான் வேற்றுமை இருக்க முடியும் அறிவில் கிடையாது.
கேள்வி- விழிப்பு நிலைக்கும், கனவு நிலைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
பதில் - உண்மையில் வேறுபாடு இல்லை. ஆனால் புரிந்து கொள்வதில் ஒரு வேற்றுமை இருக்கிறது. கனவில் காணும் விஷயங்கள் நிலையாக இருப்பதில்லை. விழிப்பு நிலை விஷயங்கள் நிலையாக இருக்கிறது.
கேள்வி - விழிப்பு நிலையிலும் சில விஷயங்கள் நிலையாக இருப்பதில்லை. உதாரணமாக மின்னல், நீர்குமிழி ஆகியவைகளாகும்..
பதில் - அறிபவனும் இருக்கிறான், அறியப்படும் பொருளும் இருக்கிறது. இதில் அறிபவன் இல்லை இருந்தாலும் கூட அறியப்படும் அந்தப் பொருள் இருக்கும். இதற்கு வியாவகாரிக சத்யம் என்று அழைக்கப்படும். பார்க்கிறவன் இருக்கும்வரை விஷயம் இருக்கும். பார்ப்பவன் சென்றுவிட்டால் அதுவும் சென்றுவிடும். இதற்கு பிராதிபாஸிக சத்யம் என்று பெயர். கனவில் காண்கின்ற பொருட்கள் யாவும்; பிராதிபாஸிக சத்யம், விழிப்புநிலையில் காணும் பொருட்கள் வியாவகாரிக சத்யம். பிரம்மன் பாரமார்த்திக சத்யம். ஆகவே இரண்டு நிலைக்கும் வேற்றுமை இருக்கிறது. இரண்டு நிலையிலும் அடையப்படும் அறிவு ஒன்றாகத்தான் இருக்கிறது.
 
ஸ்லோகம்-5
கேள்வி - ஆழ்ந்த உறக்கத்தில் எதையும் அறியாததால் விஷயங்களும் இல்லை. எனவே விஷயங்கள் இல்லாததால் அறிவும் இருக்காது அல்லவா?
பதில் - இரண்டுமே இருக்கிறது என்பதை இந்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் விஷயமாக இருப்பது அறியாமைதான். இருள் என்கின்ற அக்ஞானம் விஷயமாக இருக்கிறது. இந்த அறியாமையை அறிகின்ற அறிவும் இருக்கின்றது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தபின் மனதில் ஒரு ஞாபகம் வருகிறது. நான் நன்றாக தூங்கினேன் அப்போது ஒன்றும் அறியவில்லை என்று நினைக்கிறோம். நாம் எதை அனுபவித்தோமோ அதைத்தான் நினைத்துப் பார்க்க முடியும், ஞாபகப்படுத்தி சொல்லமுடியும். இந்த ஞாபகம்படுத்தி பார்ப்பதிலிருந்து அங்கே விஷயமும், அறிவும் இருக்கிறது என்பது நிலைநாட்டப்படுகிறது.
ஸௌஷுப்த - ஆழ்ந்த உறக்கத்தில்
தமோ போதஹ - அறியாமையினுடைய அறிவு
ஸ்ம்ருதி பவேத் - ஞாபகப்படுத்தி பார்க்க முடிகிறது.
ஸா -அந்த ஞாபகமானது
அவபுத்தி விஷயா - ஏற்கனவே அனுபவிக்கபட்ட விஷயம்
தத் - ஆகவே
ததா - அப்போது
தமஹ அவபுத்திம் - அறியாமையானது அனுபவிக்கபட்டுள்ளது.
 
ஸ்லோகம்-6
ஸஹ போதஹ - அந்த அறிவு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அறியாமையை அறிந்த அறிவு.
விஷயாதி பின்னஹ - அறியாமையிலிருந்து, விஷயத்திலிருந்து வேறுபட்டது
ந போதாத் - இந்த அறிவு ஜாக்ரத் நிலையில் ஏற்படும் அறிவைக்காட்டிலும் வேறல்ல
ஸவப்ன போதவத் - கனவு நிலையில் அடையும் அறிவு, விழிப்பு நிலையில் ஏற்படும் அறிவைக்காட்டிலும் வேறல்லாததாக இருப்பது போல
ஏவம் - இவ்விதத்தில்
ஸ்தான த்ரயே அபி ஏகஹ - மூன்று நிலைகளிலும் ஒரே ஒரு அறிவுதான் இருக்கிறது
தத் விததினாநித்ர - இதுபோல எல்லா நாட்களிலும் அறிவு ஒன்றாகதான் இருக்கிறது.
 
ஸ்லோகம்-7
இதில் ஸம்வித் (சைதன்யம்) ஸ்வயம் பிரகாசம், நித்யம் என்று நிலை நாட்டப்படுகிறது.
மாதங்கள், வருடங்கள், கல்பங்கள் போன்ற விதவிதமான காலங்களிலும், சென்ற, இருக்கின்ற, வரப்போகின்ற காலங்களிலும் ஒன்றான இந்த அறிவு தோன்றுவதில்லை, அழிவதுமில்லை. ஓன்று என்று சொல்லும்போது அதற்கு வேறாக எதுவும் இல்லையென்றும், பிறப்பும், இறப்பும் இல்லை என்று உறுதியாகிறது.
ஏஷாம் ஸ்வயம் ப்ரபாஹா - இது தானாக பிரகாசித்து கொண்டு இருக்கின்றது.
எந்தப்பொருளினுடைய இருப்பையும் ஏதாவது ஒரு கருவியைக் கொண்டுதான் அறிய முடியும். இந்த ஸம்வித்தை அறிவதற்கு எந்த பிரமாணமும் தேவையில்லை, அது  தானே விளங்கிக் கொண்டிருக்கிறது.
 
ஸ்லோகம்-8
உண்மையிலே நாம் நான் என்ற சொல்லுக்கு விதவிதமான வகையில் வெவ்வேறு காலங்களில் பொருட்படுத்துகிறோம். ஆத்மாவை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அறியாமலும் இருக்க முடியாது. நான் என்கின்ற ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாக எப்படி புரிந்து கொள்ள முடியும்?
நம் மனதில் ஆசை என்ற உணர்வு இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஆசைக்குரிய விஷயம் என்னவென்று கேட்கும் போது அந்த விஷயத்திலிருந்து கிடைக்கின்ற சுகம், ஆனந்தம் என்று பதில் கிடைக்கிறது. நாம் விரும்புகின்ற விஷயத்தில் சுகம் இருக்கிறது. எனவேதான் அதை விரும்புகிறோம். இதிலிருந்து நாம் ஆனந்தத்தைதான் உண்மையாக விரும்புகிறோம். அதை கொடுக்கும் விஷயத்தில் அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு பொருளிலிருந்து ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் அதை வெறுத்து ஒதுக்கிவிடுவோம். எங்கு எது விருப்பத்திற்குரிய விஷயமோ அதில் சுகம் ஆனந்த ஸ்வரூபம். நான் யாரை இந்த உலகத்தில் அதிகமாக நேசிக்கிறேன் என்று கேட்டால் எல்லோரும் தன்னைத்தான் சொல்வார்கள். இந்த இரண்டு வாக்கியத்தை சேர்த்துப் பார்த்தால் என்னிடத்தில்தான் ஆனந்தம் இருக்கிறது என்பது தெளிவாக தெரியும். எனவே நான் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிறேன் என்று அறிந்து கொள்ளலாம்.
 
கேள்வி: நான் எல்லா நேரங்களிலும் என்னை நேசிப்பது கிடையாது. என்னையே சில சமயங்களில் துன்புறுத்திக் கொள்கிறேன். என்மீது கோபப்படுகிறேன். சிலர் தன்னையே அழித்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும்போது எப்படி ஒருவன் தன்னையே ஆனந்த ஸ்வரூபம் என்று சொல்லிக் கொள்ள முடியும்?
பதில்: நம்மையே நாம் வருத்திக்கொள்வதும், அழித்துக் கொள்வதும் நம் மீதுள்ள அதிக அன்பையே காட்டுகிறது. உதாரணமாக நாம் அதிக அன்பு காட்டும் குழந்தை நன்கு படிக்கவில்லையென்றால் கோபப்படுகிறோம், தண்டிக்கிறோம். ஆனால் பக்கத்துவீட்டு குழந்தை இதேமாதிரி இருந்தால் அதன்மீது கோபப்பட மாட்டோம். அதுபோல சில சூழ்நிலைகளால்தான் நாம் நம்மை துயரப்படுத்திக் கொள்கிறோம். இந்த துயரத்தை தன் மீது ஏற்றி வைத்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்கிறோம். தன்மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பு இருப்பதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறோம். சூழ்நிலையைத்தான் நாம் வெறுக்கிறோமே தவிர நம்மை அல்ல என்று புரிந்து கொள்ளலாம்.
பர ப்ரேமயாஸ்பதம் யதஹ - ஆத்மா மேலான விருப்பத்திற்குரிய விஷயமாக இருப்பதனால்
ப்ரேம ஆத்மனி ஈஷ்யதே - அன்பானது தன்னிடத்தில் அறியப்படுகிறது.
மா ந அபாவம் - நான் இல்லாமல் போவேனாக என்ற நிலை வேண்டாம். நான் என்றும் இருப்பேனாக.
ப்ருயாவம் - நான் என்றும் நலமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமானது தன்னிடத்திலே அறியப்படுகிறது.
 
ஸ்லோகம்-9
கேள்வி - புத்திரன், மனைவி, சொத்து போன்றவைகள் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிறது. ஏனென்றால் அவைகள் ஆத்மாவை போல விரும்பப்படுகிறது.
பதில் - உண்மையில் யாரும் யாரையுமே நேசிப்பது கிடையாது. உன்னை மட்டும்தான் நேசிக்கிறாய். நாம் நேசிக்கின்ற பொருளோடு சம்பந்தம் வைத்து இருப்பதால் அது நேசிக்கப்படுகிறது. அந்த சம்பந்தம் சென்றுவிட்டால் அந்தப் பொருளின் மீதுள்ள ஆசையும் சென்றுவிடும். அந்தப் பொருளில் நான் என்று நினைப்பு இருப்பதால் நேசிக்கின்றோம். நான் என்ற சம்பந்தம் இல்லாத பொருட்கள் மீது உதாசீனனாக இருப்பார்கள். யாரும் நம்மை நேசிக்க முடியாது, நாமும் யாரையும் நேசிக்க முடியாது.
 
ஆத்மனஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவதி (ப்ரு.உநி)
தன்னை விரும்புவதனால்தான் மற்றதையும் விரும்புகின்றோம்.
ஆத்மா த்ரஷ்டவ்யா - ஆத்மாவை அறிவதுதான் சாத்தியமாகின்றது. அதை அறிய உதவும் சாதனங்களாவது சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
அன்யத்ர - எந்த அன்பானது புத்திரன் போன்ற வேறிடத்தில் இருப்பதாக தெரிகிறதோ
தத் ப்ரேம - அந்த அன்பானது
ஆத்மார்தம் - அவைகளில் நான் சம்பந்தப்பட்டிருப்பதால்
;உன்னிடத்தில் இருக்கும் ஆனந்தம் எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல. ஏனென்றால் நான் ஆனந்த ஸ்வரூபமாகவே இருக்கிறேன்.
ஆத்மனி - தன்னிடத்தில் இருக்கின்ற அன்பு, தன்னை நேசிக்கின்ற அன்பு
ந ஏவம் அன்யார்த்தம் - வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. மற்றவர்களுக்காக அல்ல. அது இயல்பானது.
ஆதஹ - ஆகவே, என்னை நேசிப்பதற்கு நிபந்தனையேதும் இல்லாது இருப்பதனால்
தத பரமம் - அந்த அன்பு மேலானது, எல்லையற்றது (நிரதிஸயம்)
தேன - அதனால்
ஆத்மனஹ பரமானந்ததா - ஆத்மாவின் ஸ்வரூபம் மேலான ஆனந்தமாக இருப்பது என்பது நிலை நாட்டப்படுகிறது.
 
ஸ்லோகம்-10
இத்தம் - இவ்விதம்
ஆத்மா ஸத்சித்பரானந்த - ஆத்மாதான் (நான்) ஸத்,சித், மேலான ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றது என்று
யுக்தியா - யுக்தியை பயன்படுத்தி விளக்கப்பட்டது.
ததாவிதம் - அவ்விதமே
பரப்ரஹ்ம - மேலான பிரம்மத்தின் ஸ்வரூபம் இதுவேதான்
தயோ: ச ஐக்கியம் - இந்த இரண்டுக்குமிடையே உள்ள ஐக்கியத்தை, ஒன்று என்ற தன்மையானது
ஸ்ருத்யந்த - வேதாந்தத்தில்
உபதிஸயஹ - உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
 
ஸ்லோகம்-11
கேள்வி1 - நான் ஆனந்த ஸ்வரூபம் என்றால் ஏன் துயரத்தை அனுபவிக்கிறேன்?
        ஆனந்த ஸ்வரூபம் பிரகாசிக்கிறதா இல்லையா?
கேள்வி2 - விளங்கிக்கொண்டிருக்கிறதா இல்லையா? விளங்கிக் கொண்டிருந்தால் ஏன் ஆனந்தத்தை வெளியே உள்ள விஷயங்களில் நாடுகிறோம்?
கேள்வி3 - விளங்கிக்கொண்டிருக்கவில்லை என்றால் உன்னிடத்தில் உனக்கு பிரியமே ஏற்படாது. ஆனால் நீ உன்னை நேசிக்கிறாய். அது எப்படி சாத்தியமாகிறது? எனவே ஆத்மா ஆனந்த ஸ்வரூபமான தன்மை கிடையாது.
பதில் :  ஆத்மா விளங்கிக் கொண்டுமிருக்கிறது. விளங்காமலும் இருக்கின்றது. எப்படி ஒரு பொருள் இந்த இரண்டு தன்மைகளுடன் இருக்க முடியும் என்ற சந்தேகம் வருகின்றது.
அபானே ந பரம் ப்ரேம - உனக்கு ஆத்மாவினுடைய ஆனந்த ஸ்வரூபம் விளங்கவில்லையென்றால், உன்னிடத்தில் மேலான ஆனந்தம் இருக்காது. உன்னையே நேசிக்க முடியாது.
பா4னே - ஆத்மா விளங்கிக் கொண்டிருக்கும் போது வெளியே உள்ள விஷயங்களில் ஆசை இருக்காது.
அதஹ - மேலே கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து
அஸௌ - இந்த ஆத்மா, பரபிரம்மன் ஆனந்த ஸ்வரூபம் என்பது நிரூபணமாகிறது.
பரமானந்த ததாத்மனஹ - ஆத்மாவினுடைய ஆனந்த ஸ்வரூபமானது
பானே அபி அபா4தா - விளங்கிக் கொண்டிருக்கும் போதே விளங்காமலும் இருக்கிறது.
இதிலிருந்து ஒரு பொருள் எப்படி அறிந்தும் அறியாமல் இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுகின்றது.
 
ஸ்லோகம்-12
ஒரு பொருள் ஒரே காலத்தில் விளங்கிக் கொண்டும், விளங்காமலும் இருக்க முடியும் என்பதை உதாரணத்தின் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். அதாவது சாதாரண அறிவினால் விளங்கிக் கொண்டிருப்பதை உணரலாம். விசேஷமான அறிவினால் விளங்காமல் இருப்பதை உணரலாம்.
ப்ரதிபந்தம் - தடை
வேதத்தை அத்யயனம் செய்து கொண்டிருக்கின்ற மாணவர்களின் மொத்த சப்தத்திற்கு நடுவே தன்னுடைய மகன் உச்சரிக்கும் சப்தம் மட்டும் தந்தைக்கு   கேட்கிறது, ஆனால் தனியாக கேட்கவில்லை அதுபோல விளங்கிக் கொண்டும் இருக்கின்றது, விளங்கிக் கொண்டிருந்தும் விளங்காமலும் இருக்கின்றது. தடையேற்படும் போது இந்த நிலை ஏற்படும்.
 
ஸ்லோகம்-13
இதில் ப்ரதிபந்தம் என்ற சொல்லினுடைய லட்சணம் கூறப்படுகிறது. பிரதிபந்தம் என்பது இருக்கின்ற, விளங்கிக்கொண்டிருக்கின்றதும், விவகாரத்திற்கு தகுதியான பொருளிடத்தில்
தம் கிரஸ்ய - அந்த விவகாரத்தை நீக்கி
விருத்தஸ்ய தஸ்ய - அதனுடைய விரோதமானதை
உத்பாதனம் உச்யதே - உற்பத்தி செய்கிறது என்று சொல்லப்படுகிறது.
 
அதாவது இல்லாததை, விளங்காததை தோற்றுவிக்கிறது. (-ம்) இரவில் நட்சத்திசத்தை இருக்கின்றது என்று கூறுகின்றோம். ஆனால் பகலில் இல்லை என்று கூறுகிறோம். ஏனெனில் அதன் இருப்புக்கு, பிரகாசிப்பதற்கு சூரிய ஒளி தடையாக இருக்கிறது. இருளானது தடையாக இருந்து பொருட்களை தெரியாமல் செய்துவிடுகிறது. சிரவணம், மனனம் என்ற சாதனங்கள் மூலம் ஆத்ம ஞானத்தை அடைந்தாலும், மனமானது சரீரத்தை நான் என்று அபிமானத்துக் கொண்டிருப்பதற்கு தடையாக இருக்கின்றது.
 
ஸ்லோகம்-14
காரண பரதிபந்தம் - பிரதிபந்தம் காரணத்தில் பார்க்கும் போது அது காரணத்தில் இருந்து வெளிப்படும் விஷயத்திற்கு தடையாக இருத்தல்.
காரிய பிரதிபந்தம் - காரிய உற்பத்திக்கு தடையாக இருப்பது
புத்ர த்வணி ஸ்ருதௌ - மகனுடைய குரலை கேட்கும் விஷயத்தில்
ஸமான அபி4ஹார: - எல்லோரும் சேர்ந்து வாய்விட்டு படித்தல்
தஸ்ய ஹேது - தடையாக இருக்கிறது.
இஹ - இங்கு, ஆத்மாவினுடைய ஆனந்த ஸ்வரூபம் என்ற விஷயத்தில்
அனாதி அவித்யா ஏவ - காலகாலமாக இருக்கின்ற அறியாமை
வ்யமேஹ ஏக நிபந்தனம் - ஒரு விசேஷமான மோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற காரணம்
அனாதிஹி - பிரம்மத்தை குறிக்கும் போது இந்த சொல் குறிக்கின்ற பொருளானது, அதன் இருத்தலுக்கு எதுவும் காரணமில்லை என்பதாகும். இந்த இடத்தில் அறியாமையின் ஆரம்பத்தை சொல்லமுடியாது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மிடத்திலிருந்து அறியாமை எப்பொழுதிலிருந்து இருக்கிறது என்று சொல்ல முடியாது. அறிவை அடைந்து இந்த அறியாமையை நீக்கி விடலாம். இந்த அறியாமை மறைக்கும் செயலை மட்டும் செய்வதில்லை, மோகத்தையும் உண்டு பண்ணுகிறது.
வ்யாமோஹ - விபரீத எண்ணம், எதிர்மறையான அறிவை கொடுத்தல்.
உண்மையில் இருக்கின்ற ஒன்றின் மேல் வேறொன்றை பார்க்கும் நிலையை ஏற்படுத்தும்.
நிபந்தனம் - காரணம்
இந்த அவித்யானது பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபத்தை முழுவதுமாக மறைக்காமல் பொதுவான அம்சத்தை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் விசேஷ அம்சமான நானே ஆனந்த ஸ்வரூபம் என்ற அம்சத்தை மறைக்கிறது. அது மட்டுமல்லாமல் சரீரமே நான், மனமே நான் என்ற விபரீதமான ஞானத்தை கொடுத்துவிடுகிறது. இதனால் மனதுக்கு வரும் குறையை போக்கி கொள்ள, உடலுக்கு வரும் குறையை போக்கிக் கொள்ள சுகம் தருகின்ற விஷயத்தை நோக்கி மனம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து நம்மிடத்தில் இருக்கும் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்ற அறிவு நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவித்யானது விளக்குவதற்கு ஸ்ருஷ்டியை இனிக் கூறப்போகிறார்.
 
ஸ்ருஷ்டி விசாரம் தொடக்கம்
ஸ்லோகம்-15
அவித்யாவின் மூலம் பிரகிருதி என்று அறிமுகப்படுத்துகிறார். பிரகிருதி மூன்று லட்சணங்களை உடையது என்பதை விளக்குகிறார். அவைகள் 1.பிரம்மத்தின் பிரதிபிம்பத்துடன் கூடியது, 2.அறிவு ஸ்வரூபமானது, 3.ஆனந்த ஸ்வரூபமானது ஆகும். இது சத்துவ, ரஜோ, தமோ என்கின்ற மூன்று குணங்களுடன் கூடியதாக இருக்கிறது. மேலும் இது இரண்டு விதமாக இருக்கிறது. சத்துவ பிரதானம், ரஜஸ் பிரதானம் ஆகியவை இந்த இரண்டு வகையாகும். தமோ பிரதானமாக இருக்கும் போது ஜடமாக இருக்கிறது. சத்துவ பிரதானமாக வெளிப்படும் போது ரஜஸ், தமஸ் வெளிப்பாடுகளை அடக்கி வைத்து சத்துவத்தை மட்டும வெளிபடுத்துகிறது.
 
ஸ்லோகம்-16
சத்துவ பிரதான பிரகிருதி சுத்த பிரகிருதி என்றும், ரஜஸ் பிரதான பிரகிருதி அசுத்த பிரகிருதி என்றும் அழைக்கப்படுகிறது. சுத்த சத்துவ பிரகிருதி செயல்படும் போது மாயா என்று அழைக்கப்படுகிறது. அசுத்த பிரகிருதி செயல்படும் போது அவித்யா என்று அழைக்கப்படுகிறது. மாயையும் அவித்யா என்று கருதப்படுகிறது. ஆத்மாவின் பிரதிபிம்பத்துடன் கூடிய மாயையை தன் வசத்தில் வைத்திருப்பவர் ஈஸ்வரனாகிறது. இவர் எல்லாம் அறிந்தவராக இருக்கிறார்.
 
ஸ்லோகம்-17
அவித்யாவின் வசத்தில் இருப்பவன் ஜீவன். அவித்யாவிலுள்ள வேற்றுமையினால் ஜீவர்கள் பலவகையாக இருக்கிறார்கள். அதனால் அவித்யாவானது ஜீவனுடைய காரண சரீரமாகிறது. இந்த காரண சரீரத்தில் அபிமானம் உடையவனை பிராக்ஞன் என்று கூறப்படுகிறது. பிராக்ஞன் அறிவுடையவன், ஞானஸ்வரூபி, எதுவுமில்லாமல் அறியாமையில் மட்டும் இருப்பவன்
 
ஸ்லோகம்-18
ஈஸ்வரனுடைய கட்டளையால் ஜீவர்களுடைய போகத்திற்கு ஐந்து சூட்சும பூதங்கள் உருவாயின. அவைகள் ஆகாசம், காற்று, அக்னி, நீர், நிலம் ஆகியவைகளாகும். இவைகள் தமோ குண பிரதானமாக இருந்தாலும் மற்ற இரு குணங்களான சத்துவம், ரஜஸ் ஆகிய இரண்டு குணங்களும் சேர்ந்திருக்கும்.
 
ஸ்லோகம்-19
இந்த சூட்சும பூதங்களின் சத்துவ அமசத்தின் துணைக்கொண்டு முறையே காது(கேட்கும் சக்தி), தோல்(தொட்டுணரும் சக்தி), கண்(பார்க்கும் சக்தி), நாக்கு(சுவைக்கும் சக்தி), மூக்கு(நுகரும் சக்தி) ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள் தோன்றின.
ஆகாசம் - சப்தம் - கேட்கும் சக்தி
வாயு - தொடுதல் - தொட்டுணரும் சக்தி
அக்னி - ரூபம் - பார்க்கும் சக்தி
நீர் - சுவை - சுவைக்கும் சக்தி
நிலம் - வாசனை - நுகரும் சக்தி
 
ஸ்லோகம்-20
இந்த சூட்சும பூதங்களின் சத்துவ அம்சங்கள் சேர்ந்து அந்தக்கரணம் தோன்றியது. அந்தகரணமானது எண்ணங்களின் மாற்றத்தைப் பொறுத்து இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவைகள் மனம், புத்தியாகும். மனமானது சந்தேகப்படுவது, ஆராய்ச்சி செய்வது ஆகிய குணங்களை உடையது. தீர்மானம் செய்கின்ற குணத்தை உடையது புத்தியாகும்.
விசாரம்: இதுவா, அதுவா என்று சிந்திப்பதே சந்தேகம். இரண்டு பக்கத்திலும் உள்ள சூழநிலைகளிட இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யுக்தியின் மூலமாக தொடர்ந்து சிந்திப்பது விசாரமாகும். சித்தம் மனதோடு சேர்க்கப்படுகிறது. அகங்காரம்  புத்தியோடு சேர்க்கப்படுகிறது.
சித்தம் - ஸ்மரணம், எண்ணப்பதிவுகள், நினைத்துப்பார்க்கும் சக்தி
அகங்காரம் - கர்வம் கொள்ள செய்வது
 
ஸ்லோகம்-21
செயலை உற்பத்தி செய்கின்ற இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள்.
ஆகாசம்   - ரஜோ குணம் - வாக்கு, பேசுதல்
வாயு   - ரஜோ குணம் - பாணி - கைகள்
அக்னி - ரஜோ குணம் - பாத3 - கால்கள்
நீர்     - ரஜோ குணம் - பாயு - மலம் கழிக்கும் உறுப்பு
நிலம்   - ரஜோ குணம் - உபஸ்தஹ - சிறுநீர் கழிக்கும் உறுப்பு
இவை ஐந்தும் சூட்சும பு+தங்களினுடைய ரஜோ குணத்திலிருந்து முறையே கர்மேந்திரியங்களான பேசுதல், நடத்தல், செயல் செய்தல், மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் தோன்றின.
 
ஸ்லோகம்-22
சூட்சும பூதங்களின் ரஜோ குண அம்சங்களெல்லாம் சேர்ந்து பிராணன் தோன்றியது. இந்தப் பிராணன் அதன் செயலின் அடிப்படையில் ஐந்தாக பிரிக்கப்படுகிறது. அவைகள் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகும். ஓவ்வொரு பிராணனின் இருப்பிடமும், செயலும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிராணன் - இதயம் - மூச்சுக்காற்று உள்ளே இழுத்து வெளியே விடுவது
அபானன்  - குதம்   - கழிவுகளை வெளியேற்றுவது
சமானன்  - நாபி   - சாப்பிட்டதை செரிமானம் செய்வது
உதானன் - கண்டம் - மரண காலத்தில் எல்லா சூட்சும சக்திகளையும் உடலுக்கு வெளியே கொண்டு செல்வது
வியானன் - சரீரம் முழுவதும் வியாபித்திருத்தல் - உதிரத்தை உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் எடுத்துச் செல்லுதல்
இவ்விதம் பிராணண ஐந்து வழியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
 
ஸ்லோகம்-23
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி ஆகிய பதினோரு சக்திகளும் சேர்ந்து சூட்சும சரீரம் என்றும், லிங்க சரீரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூட்சம சரீரம் ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை, சைதன்ய ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கும் அறிகுறியாக இருக்கிறது.
 
ஸ்லோகம்-24
பிராக்ஞன் ஒரு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது தைஜஸன் என்று அழைக்கப்படுகிறான். ஈஸ்வரன் மொத்த சூட்சும சரீரங்களை அபிமானிக்கும் போது ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறான். தைஜஸன் ஒரு சூட்சும சரீரத்தை அபிமானிப்பதால் விதவிதமாக இருக்கிறான். ஹிரண்யகர்ப்பன் சமஷ்டி சரீர அபிமானியாக இருக்கிறான்.
 
ஸ்லோகம்-25
மரங்களின் கூட்டத்தை தோப்பு என்கிறோம். இந்த தோப்புதான் சமஷ்டி என்று அழைக்கப்படுகின்றது. ஒரு தனி மரத்தை வியஷ்டி என்று கூறப்படுகிறது.
தாதாத்ம்யம்  - அபிமானம், ஒன்றை தானாக பாவித்தல்
பிராந்தி தாதாத்ம்யம் - தவறால் ஒன்றின் மீது அபிமானம் வைத்தல்
ஜீவனிடம் இத்தகைய அபிமானம் இருக்கிறது.
பேத ஸஹிஷ்ணு தாதாத்ம்யம் - மேலோட்டமாக வேற்றுமை தெரிந்தாலும் அதன் அதிஷ்டானத்தில் அபிமானம் கொள்ளுதல். இது ஈஸ்வரனின் ஞானத்துடன் கூடிய அபிமானம் வைத்தல்.
எல்லா ஜீவர்களுடைய சூட்சும சரீரத்தை தானாக அறிகின்ற காரணத்தால் ஹிரண்யகர்ப்பன் சமஷ்டியாக இருக்கிறார். அது இல்லாத காரணத்தால் ஹிரண்யகர்ப்பனுக்கு வேறாக இருக்கின்ற ஜீவர்கள் வியஷ்டி என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
ஸ்லோகம்-26
ஜீவர்களுடைய போகத்திற்காக அனுபவிக்கக்கூடிய பொருட்களை அனுபவிப்பதற்காக ஸ்தூல சரீரத்தை படைப்பதற்காக இறைவன் ஆகாசம் முதலிய ஐந்து சூட்சும பூதங்கள் ஒவ்வொன்றும் ஐந்து வகையாக இருக்குமாறு படைக்கிறார்.
 
ஸ்லோகம்-27
சூட்சும பூதங்களை நாம் பார்க்க முடியாது, அனுபவிக்க இயலாது. அவைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன்தான் இருக்கும். இவைகள் ஒன்றோடொன்று ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கும் போது ஸதூல பூதங்கள் தோற்றமெடுக்கிறது. இவைகளைத்தான் ஜீவர்கள் அனுபவிக்க முடியும். ஆகாசம் முதலில் இரண்டாக சமமாக பிரித்து ஒரு பகுதியை மேலும் நான்காக சமமாக பிரித்து மற்ற நான்கு பூதங்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இதே மாதிரி மற்ற நான்கு பூதங்களையும் பிரித்து கொடுக்க வேண்டும். இதையே பஞ்சிகரணம் என்று கூறுவர்.
 
ஸ்லோகம்-28
பஞ்சிகரணத்தால் ஸ்தூல பூதங்களிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பதினான்கு உலகங்கள் தோன்றின. அனுபவிக்கக்கூடிய விஷயங்கள், பொருட்கள், போகத்தை அனுபவிக்கும் ஸ்தூல சரீரங்கள் தோன்றின. ஹிரண்யகர்ப்பனாக இருப்பவர் சமஷ்டி ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது வைஷ்வானரன் அல்லது விராட் என்று அழைக்கப்படுகிறார்.
 
ஸ்லோகம்-29
ஜீவர்கள் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது அவனே விஸ்வன் என்று அழைக்கப்படுகிறான். ஜீவர்கள் தேவர்கள், மிருகங்கள், மனிதர்கள், தாவரங்கள் ஆகியவைகளாகவும் இருக்கிறார்கள். ஜீவர்களின் துயரத்திற்கு மூலகாரணம் என்ன என்பதை கூறுகிறார்.
ப்ரத்யக் தத்துவம் - தன்னுடைய உண்மையான ஸ்வரூபம், ஆத்ம தத்துவம்
போத4விவர்ஜிதா - அக்ஞானம் இல்லாமை
நம்முடைய அனைத்து துயரங்களுக்கும் மூல காரணம் அறியாமை. ஜீவர்களுக்கு இயற்கையிலே தன்னைப்பற்றிய அறியாமையுடன் இருக்கிறார்கள். அறியாமையின் முதல் விளைவு அத்யாஸம். ஒன்றின் மேல் வேறொன்றை ஏற்றி வைத்து அதை அனுபவித்தலே அத்யாஸம். அவர்கள் வெளியேயுள்ள சரீரம் முதலிய விஷயங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு உள்ளேயிருக்கின்ற ஆத்ம தத்துவத்தை பார்க்க முயற்சிப்பதில்லை.
 
ஸ்லோகம்-30
சம்சார சக்கரமானது விவரிக்கப்படுகிறது. நம்மிடமிருந்து உருவாகும் செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம். வாக்கால், மனதால் இந்த செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் ஒருவித இன்பத்தை அடைவதால் செயல்களை செய்கிறோம். நாம் கர்த்தாவாக இருப்பது போக்தாவாக இருப்பதற்காகத்தான், போகத்தை அனுபவிக்க செயல் செய்கின்றோம். இவ்விதமாக கர்மம்-போகம்-காமம் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றோம். போகம் எப்படி கர்மத்தை செய்வதற்காக அனுபவிக்கின்றோம் என்று விசாரித்தால் போகம் ஸம்ஸ்காரங்களை மனதில் பதிவு செய்கின்றது. இது நினைவுக்கு வரும். மனதில் எழும் நினைவுகள் திரும்ப திரும்ப வரும்போது அதுவே ஆசையாக உருவெடுக்கிறது. இந்த ஆசையே செயலில் ஈடுபடுத்துகிறது.
 
குர்யதே கர்ம போகாய - ஜீவர்கள் போகத்தை அனுபவிப்பதற்காக செயலில்
கர்ம கர்தும் ச புஞ்ஜாத - கர்மத்தை செய்பதற்கு போகத்தை அனுபவிக்கிறார்கள்.
எனவே ஜீவர்கள் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் சம்சாரியாக இருக்கிறார்கள்.
எப்படி நதியில் விழுந்துவிட்ட புழு ஒரு பெரிய நீர்சுழலிலிருந்து வேறொரு நீர் சுழலுக்கு கடும் வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறதோ அதுபோல ஜீவர்கள் ஒரு பிறவியிலிருந்து வேறொரு பிறவிக்கு சென்று கொண்டு மனவமைதியை அடைவதில்லை.
விஸ்ராம்யந்தி  - ஓய்வெடுத்தல்
 
ஸ்லோகம்-31 & ஸ்லோகம்-3
நதியில் விழுந்துவிட்ட புழுவை அதன் புண்ணிய பலன் வெளிப்படும் போது யாரோ கருணையுள்ளம் கொண்ட ஒருவனால் நீரிலிருந்து வெளியே தூக்கிவிடப்பட்டு கரையிலுள்ள மரத்தின் நிழலை அடைந்து எப்படி சுகத்தை அனுபவிக்குமோ,   
அவ்விதம் ஜீவனுடைய புண்ணிய கர்ம பலனானது வெளிப்படும்போது தத்துவ தரிசனம் பெற்ற ஆசாரியாரிமிருந்து மேலான உபதேசத்தைப் பெற்று மனநிறைவை அடைகிறார்கள்.
வேதாந்த சிரவணம் என்பது மகாவாக்கியத்தின் பொருளைப் பற்றிய அறிவை அடைய உதவும் சாதனமாகும். விவேகம் என்பது அனாத்மாவை ஆத்மாவிலிருந்து பிரித்து புரிந்து கொள்ளுதலாகும். ஐந்து கோசங்களை ஆத்மாவிடமிருந்து பிரித்து புரிந்து கொள்ளுதலே சிரவணமாகும். பிரம்ம நிஷ்டன் என்பவன் ஞானத்தின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவன்.
ஸ்ரோத்திரிய குரு என்பவர் முறைப்படி வேத சாஸ்திரத்தை குருவிடமிருந்து உபதேசமாக பெற்றவர்.
 
ஸ்லோகம்-33
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆனந்தமயம் என்கின்ற ஐந்து கோசங்களானது ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை மறந்து விட்டதால் சம்சாரத்தை அனுபவிக்கிறான்
 
ஸ்லோகம்-34
பஞ்சீகரணத்தின் மூலமாக சூட்சும பூதங்களிலிருந்து தோன்றிய ஸ்தூல சரீரமே அன்னமய கோசம் என்று அழைக்கப்படுகிறது. சூட்சும சரீரத்தில் இருக்கின்ற ரஜோ குணத்தின் காரணமான ஐந்து பிராணன்கள், ஐந்து கர்மேந்திர்pயங்கள் இவைகள் ஒன்று சேர்ந்து பிராணமய கோசமாகின்றது.
 
ஸ்லோகம்-35
சூட்சும பூதங்களின் சத்துவ குணத்திலிருந்து தோன்றிய ஞானேந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமய கோசமாகின்றது. மேலும் ஞானேந்திரியங்களுடன் எதையும் நிச்சயம் செய்கின்ற சக்தியுடைய புத்தி சேர்ந்து விக்ஞானமய கோசமாகின்றது.
 
ஸ்லோகம்-36
காரண சரீரத்தில் இருக்கின்ற மலின சத்துவம் ஆனந்தமய கோசமாகும். காரண சரீரத்தில் அடர்ந்த அறியாமை, பாவ-புண்ணியங்கள் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது. மனதுக்குள் வருகின்ற ஆனந்த எண்ணங்கள் பிரிய விருத்தி, மோத விருத்தி, பிரமோத விருத்தி என்று மூன்று வகையாக அதனுடைய அளவைப் பொறுத்து பிரிக்கப்பட்டிருக்கிறது.
1. நாம் விரும்பியப் பொருளை பார்க்கும் போது வருவது பிரிய விருத்தி
2. விரும்பியப் பொருளை அடையும் போது வருவது மோத விருத்தி
3. அடைந்தப் பொருளை அனுபவிக்கும் போது வருவது பிரமோத விருத்தி
இவை மூன்றும் விழிப்பு நிலை, கனவு நிலை இவைகளில் மட்டும் வருவது. இந்த ஆனந்தத்தை பிரதிபிம்ப ஆனந்தம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆனந்தத்தை அனுபவக்கும்போது ஆனந்தமய கோசத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஸ்லோகம்-37
ஸ்லோகம்-37 தொடங்கி ஸ்லோகம்-48 வரை வேதாந்த சிரவணம், வேதாந்த விசாரமாக இருக்கும். ஒரு ஜீவன் அந்தந்த கோசங்களுடன் அபிமானித்து தானாக பாவிக்கும் போது ஆத்மாவாகிய அவன் அந்தந்த கோசத்தை உடையவனாக இருக்கிறான்.
 
சிரவணம் - உபநிஷத்திலுள்ள கருத்துக்களை குருமுகமாக கேட்டறிந்து விசாரம் செய்ய உதவும் சாதனம். இந்த விசாரத்தின் போது அன்வய வ்யதிரேகம் என்ற யுக்தியை பயன்படுத்தி பஞ்சகோசத்தை பிரிப்பதன் மூலமாக ஆத்மாவை அதிலிருந்து பிரித்தெடுத்து பரபிரம்மத்தை அடைய வேண்டும்.
 
அன்வய வியதிரேகம் என்றால் என்ன?
இதை இரண்டு விதமான பலனை அடைவதற்கு பயன்படுத்துகிறோம். முதல்விதம் எடுத்துக்கொண்ட இரண்டு பொருட்களிடையே காரிய-காரண சம்பந்தம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள உதவுகிறது. அன்வயம் என்பதற்கு இருத்தல் என்று பொருள். வியதிரேகம் என்பதற்கு இல்லாமை என்று பொருள். ஒன்று இருக்கும் போது அதனோடு சம்பந்தபடுத்தி பார்க்கின்ற வேறொன்றும் இருத்தல். அதேபோல ஒன்று இல்லாதிருக்கும்போது அதனோடு சம்பந்தபடுத்தி பார்க்கின்ற வேறொன்றும் இல்லாதிருத்தல். உதாரணமாக, தூசி இருந்தால் தும்மல் வருகிறது. தூசி இல்லையென்றால் தும்மலும் வருவதில்லை. எனவே தும்மலுக்கு தூசி நிமித்த காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. களிமண் இருந்தால் பானை இருக்கும். அது இல்லையென்றால் பானை இல்லை. இதில் களிமண் பானைக்கு உபாதான காரணம். நாம் அனுபவிக்கின்ற துயரத்திற்கான காரணத்தை இந்த நியாயம் மூலம் சரியாக கண்டு பிடிக்கலாம்.
 
இரண்டாவது வகையானது அனுவிருத்தி-வ்யாவ்ருத்தி நியாயம் என்பதாகும். இதில் இரண்டு வேறுபட்ட பொருட்கள் சேர்ந்திருக்கும் போது இரண்டும் வேறுபட்டது என்பதை அறிய உதவுகிறது. இந்த நியாயம் பிரித்து பார்த்து புரிந்த கொள்ளாத வகையில் சேர்ந்து இருக்கும் பொருட்களிலிருந்து அவைகளை பிரித்து பார்க்க உதவுகிறது. அனுவிருத்தி என்றால் தொடர்ந்து செல்லுதல். இது ஒரு நிபந்தனையுடன் இருக்கும். ஒரு பொருள் இல்லாத போது அதை தொடர்தல். வ்யாவ்ருத்தி என்பது இல்லாமல் இருத்தல். அது இருக்கும் போது இது இல்லாமல் இருத்தல். இதிலிருந்து இரண்டும் வெவ்வேறு என்ற முடிவுக்கு வரலாம். ஆத்மா என்ற தத்துவமும் பஞ்சகோசங்களும் ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றது. விழிப்புநிலையில் உடலும், உணர்வும் சேர்ந்திருக்கின்றது. எனவே சைதன்யமும், உடலும் வேறல்ல என்று முடிவு செய்திருக்கின்றோம். இதைப்பிரித்துப் பார்க்க அனுவ்ருத்தி-வ்யாவ்ருத்தி நியாயத்தை பயன்படுத்தி விசாரிக்க வேண்டும். ஆத்மாவை அனுவிருத்தியாகவும் உடலை வ்யாவ்ருத்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஸ்தூல சரீரம் விளங்காத போது ஆத்மா விளங்குகிறது. ஆத்மா விளங்காத போது ஸ்தூல சரீரம் விளங்குகிறது.
 
ஸ்லோகம்-38
இப்போது ஸ்தூல சரீரத்திலிருந்து ஆத்மாவை பிரித்தெடுக்கப்படுகிறது. கனவு நிலையில் ஸ்தூல உடல் இல்லாமல் ஆத்மா இருக்கின்றது. அதனால் கனவில் வரும் விஷயங்களை அனுபவிக்க முடிகிறது. இது அன்வயம். ஆத்மாவான அறிவு ஸ்பரூபம் பிரகாசிக்கும் போது ஸ்தூல உடல் பிரகாசிப்பதில்லை. இது வியதிரேகம். இதிலிருந்து ஆத்மாவானது ஸ்தூல சரீரத்தை காட்டிலும் வேறானது என்று அறிய முடிகிறது. விழிப்பு நிலையில் இரண்டையம் சேர்த்து நாம் அனுபவிப்பதால் இவைகள் வெவ்வேறு என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. கனவு நிலையில் ஸ்தூல உடல் இருப்பதை உணர்வதில்லை. அது இல்லாமல் இருப்பதாக அறிகிறோம். அந்த நிலையில் ஆத்மாவானது இருக்கிறது. அது அன்வயம் () அனுவிருத்தி என்று சொல்லப்படுகிறது. வியதிரேகம் என்பது ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்தூல உடலானது பிரகாசிக்காமல் இருக்கிறது. இதிலிருந்து ஆத்மாவும், ஸ்தூல உடலும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை என்ற அறிவை அடைய வேண்டும்.
 
ஸ்லோகம்-39
கனவுநிலையில் மனம் உணர்வுமயமாக இருப்பதால் அது ஜடமானது என்று தீர்மானிக்க முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் காரணநிலைக்கு சென்றுவிடும் அதை உணர முடியாது. அந்த நிலையிலும் சைதன்யத்தின் பிரகாசம் இருக்கிறது. ஆனால் சூட்சும சரீரம் பிரகாசிக்காமல் இருக்கிறது. இது அன்வயம் ஆகிறது. அந்த நிலையில் நான் என்கின்ற சைதன்யம் இருந்தால்தான் விழித்தவுடன் நன்கு உறங்கினேன் என்று சொல்ல முடிகிறது.  ஆனால் அது பிரகாசித்துக கொண்டிருந்தது என்று நாம் அறியவில்லை. வியதிரேகம் என்பது ஆத்மா இருக்கும் போது சூட்சும சரீரம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-40
அந்த சூட்சும சரீரத்தை பிரித்து அறியும் விவேகத்தினால் பிராண, மனோ, புத்தி ஆகிய மூன்று கோசங்களை பிரிக்கப்பட்டதாகிறது. இந்த மூன்று கோசங்கள் சூட்சும சரீரத்தில் உள்ள குணங்களின் வேற்றுமையினால் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கிறது.
 
ஸ்லோகம்-41
சமாதி அவஸ்தையில் எந்தவிதமான எண்ணங்களும் இருக்காது. அதே சமயம் அறியாமையும் இருக்காது. ஆத்மா மட்டும் இருக்கும். சமாதி அவஸ்தையில் காரண சரீரம் இல்லாத போது ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பது அன்வயம். வியதிரேகம் என்பது ஆத்மா விளங்கும் போது காரண சரீரம் இருப்பது இல்லை.
 
ஸ்லோகம்-42
எவ்வாறு முஞ்சா என்கின்ற புல்லினுள்ளே இருக்கின்ற மிருதுவான இஷீகா என்கின்ற தண்டை கவனமாக உருவி எடுக்கின்றோமோ அவ்வாறு தீரர்களால் மூன்று சரீரங்களிலிருந்து யுக்தியினால் உருவியெடுக்கப்படும் ஆத்மா பரபிரம்மமாகவே ஆகிவிடுகிறது.
 
ஸ்லோகம்-43
எந்தவொரு ஞானத்தையும் அதை தரக்கூடியக் கருவியை, பிரமாணத்தை பயன்படுத்தினால்தான் அடைய முடியும். பிரமாணத்தை தவறாக பயன்படுத்தினால் தவறான அறிவையும் அடைகிறோம். பிரமாணத்தில் ஏதாவது குறை இருந்தாலும் தவறான அறிவை அடைவோம். தர்க்கத்தை தவறாக பயன்படுத்தினாலும் தவறான அறிவை அடைவோம். எனவே பிரமாணத்தை சாpயாக கையாள வேண்டும்.  நான் என்பதன் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதற்கு உபநிஷத்தான் சரியான பிரமாணம். இது சப்தரூபமான பிரமாணம். வாக்கிய ரூபமாக இருந்து அறிவை புகட்டுகிறது. ஒரு வாக்கியம் நான்கு விதத்தில் அறிவைக் கொடுக்கும். அவைகள்
1. முக்யா விருத்தி - வாக்கியத்தின் பொருளை நேரிடையாக எடுத்துக் கொள்ளுதல். உதாரணமாக, தந்தை வருகிறார், நண்பன் போகிறான்
2. கௌன விருத்தி - யானையைப் போல் நடந்து வருகிறார் என்று சொல்லும் போது, பருத்த உடலையுடைய ஒருவர் நடந்து வருகிறார் என்று புரிந்து கொள்கிறோம்.
3. வியஞ்ஜனா விருத்தி - சொல்கின்ற இடத்திற்கேற்றவாறு பொருட் கொள்ளுதல். உதாரணமாக, தாய் குழந்தையிடம் ஆறு மணிக்கு படிக்க உட்கார வேண்டும் என்று சொல்லியிருக்கும் போது மணி ஆறு அடித்தாயிற்று என்று தாய் சொல்லும் போது தான் படிக்க உட்கார வேண்டும் என்று குழந்தை புரிந்து கொள்ளும்.
4. லக்ஷணா விருத்தி - அயோத்தி அழுதது என்ற வாக்கியத்தில் அயோத்தி வாழ் மக்கள் அழுதார்கள் என்று பொருட்கொள்ளப்படுகிறது. அதேபோல பிரம்மத்தை விளக்கும் வாக்கியத்தின் நேரிடையான பொருளை எடுத்துக் கொள்ளாமல் சொல்ல விரும்பும் பொருளை புரிந்து கொள்ள வேண்டும். இது மூன்று வகையாக இருக்கிறுது.
4.1.  ஜஹல் லக்ஷணா - இந்தியா விளையாடியது என்ற வாக்கியத்தில் இந்தியா என்ற சொல்லின் பொருளை முழவதும் விட்டுவிட்டு அதனோடு சம்பந்தப்பட்ட இந்தியாவில் வசிக்கும் விளையாட்டு வீர்ர்கள் என்ற பொருளை எடுத்துக் கொண்டு அந்த வாக்கியத்தை புரிந்து கொள்வோம்.
4.2.  அஜஹல் லக்ஷணா - ஒரு வாக்கியத்தில் உள்ள ஒரு சொல்லினுடைய பொருளுடன் வேறொன்றையும் சேர்த்து புரிந்து கொள்வது. நண்பன் தேனீர் அருந்துவதைப் பார்த்து தனக்கும் ஒரு கோப்பை வேண்டும் என்ற வாக்கியத்தில், கோப்பைளுடன் தேனீரையும் சேர்த்து புரிந்து கொள்கிறோம். சிவப்பு ஓடுகிறது என்பதில் சிவப்பு குதிரை ஓடுகிறது என்று புரிந்து கொள்கிறோம்.
4.3.  பாகத்யாக லக்ஷணா - வாக்கியத்தில் உள்ள ஒரு பகுதியை விட்டுவிட்டு மற்றொரு பகுதியை எடுத்துக்கொள்வது. பத்து வயதில் பார்த்த சிறுவன்தான் இந்த இளைஞன் என்ற வாக்கியத்தில் உள்ள வயதை விட்டுவிட்டு அந்த மனிதனை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதேபோல நீ அதுவாக இருக்கிறாய் என்று சொல்லும்போது நேரடியான பொருள் சரியாக இருக்காது. நீ, அது என்று குறிப்பிடுகின்ற ஜீவன், ஈஸ்வரன் இவர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடற்ற பொருளை எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஸ்லோக விளக்கம்:
ஏவம் பர அபர ஆத்மனோ: - இவ்விதம் பரமாத்மா, ஜீவன் இருவருக்கும்
யுக்தியா - யுக்தியின் மூலமாக
ஸம்பாவிதா ஏகதா - ஒன்றாக இருக்கின்ற தன்மை சம்பவிக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஸா - அந்த ஒன்றாக இருக்கும் தன்மையானது
பாக த்யாக லக்ஷயதே - பாக தியாக லட்சணை மூலம் புரிந்து கொள்ளலாம்.
 
ஸ்லோகம்-44
ஒரு சொல்லை கேட்டவுடன் எதை மனம் புரிந்து கொள்ளுமோ அதற்கு முக்கியார்த்தம், வாச்யார்த்தம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவன் சிங்கம் என்று சொல்கின்ற வாக்கியத்தில் அதனுடைய வாச்யார்தத்தை விட்டுவிடுகிறோம். தத் த்வம் அஸி என்ற வாக்கியத்தில் உள்ள தத் என்ற சொல்லானது ஈஸ்வரனை குறிக்கிறது. அவருடைய லட்சணம் கூறப்படுகிறது. ஈஸ்வரன் என்ற சொல்லில் அழியாத பிரம்மனும், பொய்யான தோற்றத்தை உடைய மாயா என்ற அம்சமும் சேர்ந்திருக்கின்றது. ஈஸ்வரன் மாயையின் துணைக்கொண்டு ஜகத்துக்கு காரணமாக இருக்கின்றார்.
ஜகதஹ யத் - எந்த பிரம்மன் ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கு
தமாஸீம் மாயா ஆதாய - மாயையிலுள்ள தமஸை துணைக் கொண்டு
உபாதானம் - உபாதான காரணமாகின்றதோ
ஸுத்த ஸத்தவயம் த்வாம் - எந்த பிரம்மன் சுத்த சத்துவ பிரதான மாயை துணைக் கொண்டு
நிமித்தம் - நிமித்த காரணமாக இருக்கின்றதோ
தத் கி3ரா உச்யதே - அதையே மகாவாக்கியத்திலுள்ளதத”; என்ற சொல்லுக்கு பொருளாக சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-45
இதில் த்வம் பதத்திற்கான அர்த்தம் சொல்லப்படுகிறது.
யுதா - எப்பொழுது
மலின ஸத்த்வாம் தாம் - மலின சத்துவம் என்கின்ற ரஜோ குண அம்சமான மாயையை
காம கர்மாதி தூஷிதாம் - ஆசை, செயல்கள், கர்மபலன்கள் போன்றவைகளால் தாக்கப்பட்ட மாயையின்
ஆத3த்தே - துணைக்கொண்டு
தத் பரம் ப்3ரஹ்ம - அந்த பரபிரம்மன்
த்வம் பதே ததா உச்யதே - அப்போது அந்த பிரம்மன் த்வம் பதத்தினால் குறிக்கப்படுகிறது. த்வம் பதத்தின் வாச்யார்த்தமாக இருக்கிறது. மகாவாக்கியத்தின் த்வம் என்ற பதம் ஜீவனை குறிக்கிறது.
 
ஸ்லோகம்-46
இதில் பாகத்யாக லட்சணை மூலம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் நிலைநாட்டப்படுகிறது.
மூன்று குணங்களை உடைய மாயையை விட்டுவிட வேண்டும். அவைகள் ஒன்றுக்கொன்று வேற்றுமையுடன் இருக்கிறது. தேச, கால, வஸ்து இவைகளால் வேறுபடாத, பிளவுபடாத ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்ற மகாவாக்கியத்தால்( நீ அதுவாக இருக்கிறாய்) குறிப்பிடப்படுகிறது.
 
ஸ்லோகம்-47
உதாரண வாக்கியமானசிறு வயதில் பார்த்த அவனே இந்த இளைஞன்என்ற வாக்கியத்தில் இளைஞனுக்கும், சிறுவனுக்கும் இடையே உள்ள வேற்றுமையை விட்டுவிட்டு ஒன்றாக இருக்கும் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு புரிந்து கொள்வதைப் போல ஜீவன், ஈஸ்வரன் ஆகிய சொற்களின் ஐக்கியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
ஸ்லோகம்-48
மேற்கூறிய உதாரணத்தின்படி ஜீவ, ஈஸ்வரன் ஆகியோரிடத்தில் உள்ள உபாதிகளான அவித்யா, மாயை அறிவினால் நீக்கிவிட்டு இருவரிடத்திலும் உள்ள ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உபாதி என்பதற்கு பொருள், எந்தவொரு வஸ்து தன்னுடைய ஸ்வரூப அம்சத்தை தன்னருகில் இருக்கும் வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்குமோ அதற்கு உபாதி என்று பெயர். உதாரணம்: சிவப்பு மலர் தன்னருகே இருக்கின்ற ஸ்படிகத்திற்கு சிவப்பு நிறத்தை பொய்யாக கொடுப்பதால் மலருக்கு உபாதி என்று பெயர். அதேபோல பிரம்மனுக்கு மாயா என்ற உபாதி தன்னுடைய குணங்களை கொடுத்து ஈஸ்வரனாக நினைக்க வைக்கிறது. அறியாமை என்ற உபாதி தன்னுடைய குணங்களை கொடுத்து ஆத்மாவை ஜீவனாக வைத்திருக்கிறது. மாயா தன்னுடைய தர்மத்தை பொய்யாக ஈஸ்வரனுக்கு பொய்யாக கொடுப்பதால், அவித்யா தன்னுடைய தர்மத்தை ஜீவனுக்கு பொய்யாக கொடுப்பதால் அவைகள் உபாதி என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு உபாதிகளையும் விட்டுவிட வேண்டும். பிளவுபடாத, என்றும் இருக்கின்ற, அறிவு ஸ்வரூபமானதும், எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கின்ற பரபிரம்மத்தைத்தானதவம்என்ற பதத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை பாகத்யாக லட்சணை மூலம் மகாவாக்கியம் விளக்கப்பட்டுவிட்டது.
 
ஸ்லோகம்-49
ஞானம் அடைந்த பிறகும் பல தடைகள் வரலாம். ஞானப்பலனை அனுபவிக்க முடியாமல் போவதற்கு பல தடைகள் வரலாம். அவைகளில் ஒன்று சந்தேகம். ஞானம் பலனை தரத்தடையாக இருக்கின்ற இந்த சந்தேகத்தை நீக்குவதற்கு உதவுகின்ற சாதனமே மனனம் என்று கூறப்படுகிறது. இந்த சந்தேகம் வருவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஒரு அறிவை அடைய பயன்படுத்தும் இரண்டு பிரமாணங்கள் வெவ்வேறான அறிவை கொடுப்பதால் சந்தேகம் வருகின்றது. இந்த நிலையில் எந்த பிரமாணம் உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு உண்மையான பிரமாணத்தின் மூலம் அடையும் அறிவை உறுதி செய்ய வேண்டும். நாம் அடைந்த அறிவில் குறையேதும் இல்லை என்று உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயம் குறை சொல்பவனின அறிவில்தான் குறைகள் இருக்கின்றது என்று நிரூபித்து ஒதுக்கிவிட வேண்டும்.
 
கேள்வி - பிரம்மன் நிர்குணமானது என்றும், பிளவுபடாதது என்றும் உபநிஷத் நோpடையாக விளக்காமல் லட்சணை மூலம் விளக்கியிருக்கிறது. இந்த இரண்டுமே கிடையாது என்றும். இவைகள் வெறும் கற்பனையான எண்ணம்தான் என்றும், இந்த ஸ்வரூபத்துடன் இருக்கும் பிரம்மனை லட்சியார்த்தம் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மன் நிர்குணமா? சகுணமா? என்ற கேள்வியெழும்போது சகுணம் என்றால் அது அநித்யமாகிவிடும். இத பிரம்ம லட்சணைக்கு எதிராக இருப்பதால் நிராகரிக்கப்படுகிறது. நிர்குணம் என்று பார்க்கும்போது அதை விளக்க முடியாது. ஏனென்றால் லட்சியார்த்தம் செய்யும்போது வாச்யார்த்தத்தின் சம்பந்தபட்டதைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரம்மன் அஸங்க ஸ்வரூபம் எதனோடும் சம்பந்தப்படாதது. அப்படியிருக்கும் போது எப்படி லட்சியார்த்தமாக நிர்குண பிரம்மத்தை விளக்க முடியும்? ஆகவே நிர்குண பிரம்மனை எதனாலும் விளக்க முடியாது.
 
ஸ்லோக விளக்கம்
பிரம்மன் அனுமானங்களுடன் கூடிய லட்சியார்தத்தால் விளக்கப்பட்டால் அது நித்யமானதாக இருக்காது. பிரம்மமானது நிர்குணமானது, பிளவுபடாதது என்று லட்சணை மூலம் விளக்கப்பட்டால், அப்படிப்பட்ட ஒன்றை பார்க்கவில்லை என்றாகி விடும். இதுவலையில் நிர்குண பிரம்மத்தை லட்சணையாக எங்கும் விளக்கவில்லை, விளக்கவும் முடியாது.
 
ஸ்லோகம்-50
ஐந்துவிதமான குறைகளைப் பற்றிய விளக்கம்
1. வ்யாகா3த தோஷம் (முரண்படுகின்ற குறை); - ஒரு வாக்கியத்தை கேட்டவுடனே அதில் முரண்பாடு இருப்பது தெரிந்துவிடும். (-ம்) நான் ஊமை என்று ஒருவன் சொன்னால், அந்த வாக்கியத்திலே முரண்பாடு இருப்பது  உடனே தெரிந்து விடுகிறது.
2. ஆத்மாஸ்ரய தோஷம் (தன்னையே சார்ந்திருத்தல்) - நான் என்னுடைய தோள் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்ற வாக்கியத்தை கேட்டவுடனே அதில் இருக்கும் தவறை உணர முடியும். ஓன்றினுடைய இருப்புக்கு, உருவாகுவதற்கு, செயல்படுவதற்கு அதுவே காரணமாக இருப்பதுதான் அதிலுள்ள குறை.
3. அன்யோன்ய ஆஸ்ரயம் (ஒன்றையொன்று சார்ந்திருத்தல்) - நான் மேசை மீது நிற்கிறேன், மேசை என் மீது நிற்கிறது. இந்த வாக்கியத்தில் அன்யோன்ய ஆஸ்ரய குறை இருக்கிறது.
4. சக்ரக3ம்; தோஷம் (சுற்றி சுற்றி வருதல்) திரும்ப திரும்ப ஒரே பொருளைக் குறிக்கும் வகையில் இருக்கின்ற வாக்கியம்
5. அனவஸ்தா தோஷம் (முடிவின்றி செல்லுதல்) - விதையிலிருந்து மரம் வந்ததா, மரத்திலிருந்து விதை வந்ததா என்ற வாக்கியம் இந்த குறையை உடையது.
 
குணம் என்பது ஒரு பொருளின் தன்மையை குறிக்கிறது. அதுவே தனியாக இருக்காது. ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்துதான் இருக்கும். குணம் ஏதோ ஒன்றை சார்ந்திருக்க வேண்டும என்று கூறினால் அப்படியானால்  அந்தவொன்று குணத்துடன் கூடியதா? அல்லது சகுணமா? நிர்குணம் என்று சொன்னால் வ்யாகாத தோஷம் வந்துவிடும். குணத்துடன் கூடியது என்று சொன்னால், பொருளைச் சார்ந்த குணமும், விளக்கப்போகும் குணமும் ஒன்றா? வெவ்வேறா? அவையிரண்டும் ஒன்று என்று சொன்னால் அப்போது ஆத்மாஸ்ரய தோஷம் வந்து விடும். வெவ்வேறு என்று சொன்னால் அன்யோன்ய ஆஸ்ரய தோஷம் வந்துவிடும். இதை தவிர்த்து வேறொரு குணத்தை கூறுகிறேன் என்றால் சக்ச தோஷம் ஏற்பட்டு விடும். நான்காவது குணத்தை சொல்ல ஆரம்பித்தால் அனவஸ்தா தோஷம் வந்து விடும்.
 
ஸ்லோக விளக்கம்
விகல்பஹ- பிளவானது
நிர்விகல்பஸ்ய ஸவிகல்பஸ்ய வா ப4வேத - பிளவுபடாததை சார்ந்ததா அல்லது பிளவுபட்டதை சார்ந்ததா?
ஆத்3யே - விகல்பமான நிர்விகல்பத்தை சார்ந்தது என்றால்
வ்யாகாத - வியாகாத குறை வந்து விடும்
அன்யத்ர - பிளவானது பிளவுபட்டதை சார்ந்ததா போன்ற மற்ற இடங்களில் அன்யத்ர குறை வந்துவிடும், ஆத்மாஸ்ரய குறையும் வந்துவிடும்.
 
ஸ்லோகம்-51
இந்த உலகத்திலுள்ள எந்தவொன்றிற்கும் விவஸ்தையே கிடையாது. அதனால்தான் மித்யாவாக இருக்கிறது. நாம் உலகத்தில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற வஸ்துவை நாடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் எதற்கும் பாதுகாப்பு கொடுக்கும் சக்தி கிடையாது.
 
இந்த குறையானது (லட்சணம் கொடுக்க முடியாத குறை) குணத்தில், செயலில், சமூகத்தில், பொருட்களில், உறவுகளில் போன்றவற்றில் பொருந்துகிறது. அத்யாஸம் அதிஷ்டான சம்பந்தத்தில் இருக்கும், அதிஷ்டானத்திற்கு அத்யாஸத்தினால் எந்தவித பாதிப்பும் கிடையாது. பிரம்மத்தின் மீது இந்த ஜகத் ஏற்றி வைக்கப்பட்டு இருப்பதால், இந்த சம்பந்தத்தை வைத்து லட்சியார்த்தமாக விளக்க முடிகிறது. ஜகத்தும் மித்யா, சம்பந்தமும் மித்யா. எனவே சம்பந்தத்தினால் பிரம்மத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதனால் ஜகத்தை விளக்க முடியாத காரணத்தால் இவையனைத்தும் ஸவரூபத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஸ்லோகம்-52
ஆத்மாவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற வஸ்துவில் எதனோடும் சம்பந்தப்படாது சங்கமமற்று இருக்கின்றது, வேற்றுமைகள் எதுவும் இல்லாததால் தொடப்படாதது.
வேற்றுமைகளுடையது என்றும், லட்சியார்த்தத்தால் அறியக்கூடியது என்றும் உலகத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதும் போன்றவைகளால் கற்பனையாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. பிரம்மன் பாவத்தோடும் சம்பந்தப்படாதது, அபாவத்தோடும் சம்பந்தப்படாதது. இருக்கிறதையும் வர்ணிக்காது, இல்லாததையும் வர்ணிக்காது என்பதாலும் இல்லாதது என்பதாலும் தொடப்படாதது. பிரம்மனிடத்தில் இவைகளெல்லாம் கற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. உபநிஷத் கற்பனை செய்துள்ள லட்சணையை வைத்து இருப்பதை நீக்கி பிரம்மத்தை உபதேசிக்கிறது. அத்யாஸத்தை ஏற்றுக்கொண்டு சம்பந்தத்தை சொல்லி பிரம்மமானது விளக்கப்படுகிறது.
 
ஸ்லோகம்-53
மகாவாக்கியத்தின துணைக்கொண்டு, ஆதாரமாகக்கொண்டு இவ்விதம் மேற்கூறிய ஜீவ-ஈஸ்வர பத3 விசாரத்தின்படி இருவருக்குமிடையே உள்ள ஐக்கியத்தை திரும்ப திரும்ப நன்றாக புரியும் வரையில் சிந்தித்து கொண்டிருப்பதே சிரவணமாகும். அனுமானத்தின் மூலம், தர்க்கத்தின் மூலம் சிரவணத்தால் புரிந்து கொண்ட ஜீவ-பிரம்ம ஐக்கியத்தில் எந்த சந்தேகமும் இல்லாத அறிவை அடைய வேண்டும். இந்த அறிவை உறுதிப்படுத்திக் கொள்ள செய்கின்ற சாதனமே மனனம் என்பதாகும்.
 
ஸ்லோகம்-54
நம் புத்தியில் இருக்கின்ற மூன்று தடைகளும் சிரவணத்தாலும், மனனத்தாலும் சென்றுவிடும். உபநிஷத்தின் மகாவாக்கியத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கும் தடை சிரவணம் செய்வதால் சென்றுவிடும். பிரமேயம் என்பது பரபிரம்மத்தைக் குறிக்கிறது. இதன் ஸ்வரூபம் இப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும் என்கின்ற சந்தேகத்தை மனன சாதனம் மூலம் நீக்கிவிடலாம். இனி நிதித்யாஸனத்தின் லட்சணம் கூறப்படுகிறது. மூன்றாவது தடையான விபரீத பாவனாவானது நிதித்யாஸன சாதனம் மூலம் நீக்கிக் கொள்ளலாம். சம்சாரத்தில் வைத்திருக்கின்ற மனதை அதிலிருந்து மீட்டெடுக்கும் சக்தி எதற்கு இருக்கிறது என்பதை விசாரம் செய்ய வேண்டும். அறிவு வந்ததும் மாற்றம் வந்துவிடுமா? அல்லது அதுவே மாற்றத்திற்கு தடையாக இருக்குமா? சில சமயங்களில் அடைந்த அறிவே மாற்றத்தை கொடுப்பதற்கு தடையேற்படலாம். அந்த தடையை நீக்கினால்தான் அதன் பலனை அடைவோம். நம்மிடத்தில் ஏற்கனவே இருக்கும் மனதிலுள்ள சம்ஸ்காரங்களால் இத்தகைய தடைகள் வரும். பல பிறவிகளில் அடைந்த இந்த சம்ஸ்காரங்களையே  விபரீத பாவனா என்று கூறப்படுகிறது. இந்தத் தடையை நிதித்யாஸனம் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.
 
நம்முடைய சம்ஸ்காரங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள் சாமான்ய சம்ஸ்காரங்கள், விசேஷ சம்ஸ்காரங்கள் ஆகும். சாமான்யமானது ஸ்தூல உடல், மனதை நான் என்று நினைத்துக்கொண்டு வாழ்வது. இது எல்லோருக்கும் பொதுவானது. விசேஷமானது என்பது ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து கொண்டிருப்பது. வாழ்வில் ஏதாவது ஒருவகையில் மனத்துயரத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலவகையினர் இழப்பை தாங்க முடியாமல் துயரப்பட்டுக் கொண்டிருப்பார்கள் அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மனநிலையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  இதை சுலபமாக நீக்கிக் கொள்ள முடியாது. இதை நீக்க உதவும் சாதனமே நிதித்யாஸனம். நிதித்யாஸனமும் சாமான்யம், விசேஷம் என்று இரண்டு வகையாக இருக்கிறது.  சாமான்ய சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட உதவும் சாமான்ய நிதித்யாஸனம் விளக்கப்படுகிறது. சிரவண அப்யாஸமே நிதித்யாஸனமாகும். உபநிஷத் கருத்துக்களை மனதிற்குள் மீண்டும் மீண்டும் கொண்டு வருதல் சாமான்ய நிதித்யாஸனம். இது சாமான்ய விபரீத பாவனையை நீக்க உதவும்.
 
ஆழ்ந்த மனதிலிருக்கும் பலவீனங்களை நீக்குவதற்கு உதவுகின்றது அதிக முயற்சியுடன் செய்ய வேண்டிய தியான வடிவ நிதித்யாஸனம். இப்படிபட்ட விசேஷ சம்ஸ்காரங்களை நீக்குவதற்கு தனியாக காலம் ஒதுக்க வேண்டும். தனியான இடத்தில் செய்ய வேண்டும். பயம் அதிகமாக உள்ளவர்கள் நான் பயமற்றவன் என்றும், பாச வலையில் வீழ்ந்திருப்பவர்கள் நான் பற்றற்றவன் என்றும் தியானிக்க வேண்டும். நானே பரபிரம்மன் என்று தியானிக்க வேண்டும். இதை ஜபம் பண்ணக்கூடாது, சப்தத்தில் கவனம் சென்றுவிடக்கூடாது. தியானம் செய்கின்ற சொல்லின் பொருளை மனதில் நிலைநிறுத்த வேண்டும். இதற்கு கடின உழைப்பு, கடும் முயற்சி தேவைப்படும். எனவே விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்து கொண்டு வர வேண்டும். இந்த தியானரூப நிதித்யாஸனமானது இனிமேல் விளக்கப்படுகிறது.
 
தியானரூப நிதித்யாஸனத்தின் அவசியம்
நாமெல்லோரும் தேவையான அளவு உபாஸனை செய்து மனதை தகுதிபடுத்தாமல் வேதாந்தத்தை படிக்க வந்து விட்டால் மனதை ஒரு இடத்தில் பொருத்தி அதிலேயே நிலைத்து நிற்க முடியாமல் போய் விடுகிறது. அதனால்தான் இந்த விதமான தியானம் தேவைப்படுகிறது.
 
ஸ்லோக விளக்கம்:
இதில தியானரூப நிதித்யாஸனத்தின லட்சணையை கூறுகிறார். சிரவண, மனனத்தின் துணைக்கொண்டு சந்தேகம் நீங்கப்பெற்ற ஆத்ம ஸ்வரூப விஷயத்தை மனதில் தாரணையாக பொருத்தி வைத்திருக்க வேணடும். பிறகு அந்த ஒரே எண்ணத்தையே தொடர்ந்து மனதில் நினைத்துக் கொண்டிருத்தலே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
ஸ்லோகம்-55
தியானத்தை தொடர்ந்து செய்பதனால் அதிலேயே உயர்ந்த நிலையை அடைவோம். இந்த நிலையையே சமாதி என்று கூறப்படுகிறது.
 
சமாதி நிலை விசாரம்
சிலர் மனதை தியானத்திலே தொடர்ந்து வைத்திருப்பார்கள். எதாவது ஒரு விஷயத்தை தொடர்ந்து தியானித்து அதன் பலனாக மனதை அந்த விஷயத்தில் குவிப்பதிலே வெற்றியடைந்து சமாதி நிலையை அடைவார்கள். இந்த நிலையானது  சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. விகல்பத்துடன் கூடியது சவிகல்ப சமாதி, விகல்பமற்றது நிர்விகல்ப சமாதி. விகல்பம் என்பது வேற்றுமையை குறிக்கிறது. எப்படிபட்ட வேற்றுமை என்றால் கர்ம விவகாரத்தில் செய்பவன், செயப்படும் பொருள் என்பதும். ஞான விவகாரத்தில் அறிபவன். அறியப்படும் பொருள் என்பதும் உண்டு. இங்கே தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்ற செயல் ஆகியவைகள் வேற்றுமைகளாக இருக்கின்றது. இந்த வேற்றுமைகளுடன் கூடிய சமாதி சவிகல்ப சமாதியாகும். இந்த தியானிப்பவன், தியானம் என்று வேற்றுமைகளில்லாத நிலையே நிர்விகல்ப சமாதியாகும். எப்படி உறக்க நிலையில் காலம் தெரியவில்லையோ அப்படியே இந்த நிலையில் காலம் தெரிவதில்லை. சிலருக்கு பூர்வ ஜென்ம புண்ணிய சம்ஸ்காரத்தினால் சமாதி நிலையை அடைவார்கள். வேதாந்தத்தில சமாதியினால் என்ன பயன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல் மிகவும் அவசியம். மனதை வேதாந்த சிரவணம், மனனம் செய்வதற்கு தேவையான அளவு குவிக்க முயற்சிசெய்ய வேண்டும். வேதாந்தத்தின் லட்சியம் ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலை பெற வேண்டும் என்பதாகும். இதை அடைவதற்கு எந்த அளவு தியானம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு தியானம் செய்ய வேண்டும். இலட்சியத்தை அடைந்ததும் தியானத்தை விட்டுவிட வேண்டும். தியானத்தினால் விக்ஷேபமெல்லாம் நீங்கி ஞானத்தை அடைந்து, ஞான நிஷ்டையும் பெற்றாலும் இந்த சமாதி நிலை வரலாம், வராமலும் போகலாம். மோட்சம் என்பது சாதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் போது மனநிறைவுடன் இருப்பதாகும். சமாதி என்பது மோட்சத்தின் அறிகுறியோ, காரிய, காரணமோ அல்ல.
 
ஸ்லோக விளக்கம்
இதில் நிர்வகல்ப சமாதியைப் பற்றி கூறப்படுகிறது. தியானிப்பவன், தியானம் என்கின்ற செயல் ஆகிய இரண்டுமே இந்த சமாதியின் போது கிரமப்படி சென்று விடுகிறது. அதாவது நான் தியானிப்பவன் என்ற உணர்வு சென்று விடுகிறது. பிறகு தியானம் செய்கிறேன் என்ற உணர்வும் சென்று விடுகிறது. மனமானது தியானிக்கின்ற விஷயத்தை மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கும். காற்றில்லாத இடத்தில் தீபம் அசையாமல் எரிந்து கொண்டிருப்பதை போல மனமானது தொடர்ந்து சஞ்சலமில்லாமல், அசைவற்று, அமைதியாக இருக்கின்ற நிலையே சமாதியாகும்.
 
ஸ்லோகம்-56
நம் மனதில் ஏதொவொரு எண்ணம் மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். அந்த எண்ணத்திற்கான விஷயம் தியானிக்கப்படும் விஷயமாகும்.  இதில் நான் என்ற விருத்தி கிடையாது. அதனால் காலமும் தெரியவில்லை. தியானத்தில் இருக்கிறேன் என்ற உணர்வும் இல்லை என்று சொல்கின்றோம். இந்த நிலையில் நான் என்ற உணர்வு இல்லாததால், தியானிக்கும் விஷயத்தை எப்படி அறிந்து கொள்ள முடிகிறது என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது. அதற்கு இந்த ஸ்லோகத்தில் பதில் தரப்படுகிறது. சமாதி நிலையில் விருத்திக்கு விஷயமே இல்லை.
 
ஸ்லோக விளக்கம்
நிர்விகல்ப சமாதியில் எண்ணங்கள் அறியப்படாத போதிலும் ஆத்மாவை விஷயமாகக் கொண்ட விருத்திகள் இருந்திருக்கிறது. சமாதியிலிருந்து எழுந்தபின் இருக்கின்ற ஞாபகத்தால் ஊகிக்கப்படுகிறது, அனுமானம் செய்யப்படுகிறுது. சமாதியிலிருந்து விழித்தபின் தோன்றுகின்ற விஷயங்கள்தான் ஞாபகத்துக்கு வரும் என்ற நியதிப்படியும்  இதை உறுதி செய்து கொள்ளலாம்.
 
ஸ்லோகம்-57
இன்னொரு சந்தேகமானது எழுப்பப்பட்டு அதற்கான பதில் தரப்படுகிறது. நம் மனதில் ஏதாவது எண்ணம் வர வேண்டுமானால் ஏதாவது ஒரு பிரமாணத்தை பயன்படுத்தி இருப்போம். சில சமயங்களில் மனதிலிருக்கும் ஆசையின் காரணமாக எண்ணங்கள் வரலாம். ஆனால் சமாதியில் எந்தவித முயற்சியும் இல்லாமல் அமர்ந்து கொண்டிருக்கும்போது எப்படி ஒரே எண்ணம் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது? அதன் காரணம் என்ன?
 
முதல் காரணம் கண்ணுக்கு தெரியாத நாம் செய்த பூர்வ புண்ணியத்தின் பலனாக இது வருகின்றது. இரண்டாவது காரணம் நாம் தொடர்ந்து பயிற்சி செய்து இருப்பதனால் முயற்சியின்றி ஒரே எண்ணம் இருக்கிறது. நாம் ஒரு எண்ணத்தை மட்டும் தியானத்தில மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் தியானித்து கொண்டிருந்தால் அதுவே கொஞ்ச காலத்திற்கு பிறகு எந்தவித முயற்சியில்லாமல் தொடர்ந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும். நாம் தூங்கியபின் எழுந்து கொள்வதற்கு காரணம் பாவ-புண்ணியங்களால்தான். இவைகள்தான் ஜீவனை பிராரப்த பலனை அடைவதற்கு சரீரத்தில மீண்டும் அபிமானிக்க வைக்கின்றது. அதுபோல ஒருவனுடைய புண்ணிய பலனால்தான் நிர்விகல்ப சமாதியை அடைய முடிகிறது.
 
ஸ்லோக விளக்கம்
ஒரே ஒரு எண்ணத்தின் தொடர்ச்சியை சமாதி தொடக்கத்திலிருந்து முயற்சிக்கப்படுகிறது. பலமுறை, விடாமுயற்சியுடன் செய்ததால் பூர்வ புண்ணிய பலனாலும் சம்ஸ்காரத்தை கொடுத்து விடுகிறது. மனதில் இதனுடைய வாசனைகள் பதிய வைத்திருக்கிறது. இதனுடைய உதவியினால் தொடர் எண்ண ஓட்டம் சம்பவிக்கிறது.
 
ஸ்லோகம்-58
எவ்விதம் காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் அசையாமல் எரிகின்றதோ அவ்விதம் பல எண்ணங்களற்று தொடர்ந்து ஒரே எண்ணத்தை மனதில் ஓடிக் கொண்டிருக்குமாறு இருக்கும் நிலையில் மனமானது சஞ்சலமற்று அமைதியாக இருக்கும். இதே சமாதி நிலைப் பற்றிய கருத்தையே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்துள்ளார்.
 
ஸ்லோகம்-59
நான் பரமாத்மா என்ற ஞானம் வளர்கிறது, உறுதியாகிறது. அதனால் ஜீவன் முக்தனாக உயிருள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கலாம். மேலும் எல்லா கர்ம பலன்களும் நாசமடைந்து விடுகின்றன.
கேள்வி - ஆத்மஞானம் எப்படி கர்ம பலன்களை நாசம் செய்ய முடியும்?
பதில் - சாஸ்திரம் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த கர்மபலன்கள் அகங்காரத்தை சார்ந்திருப்பதால் அது அழிந்தவுடன் அதனோடு சேர்ந்து இருக்கும் கர்மபலன்களும் அழிந்து விடுகிறது.
 
ஸ்லோக விளக்கம்
இந்த வாழ்க்கையில் சம்சாரம் தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிறது. பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்தில் இருப்பது சம்சாரம். இந்த சம்சாரத்தினால் எண்ணற்ற கர்மபலன்களை சேர்த்து வைத்துள்ளோம். இது சமாதி என்ற சாதனத்தின் மூலம் நாசத்தை அடைந்துவிடுகிறது.
 
ஸ்லோகம்-60
பிரம்மத்தை தெளிவாக அடைந்து அதிலேயே நிலைபெற்றவர்கள் சமாதி நிலையை இவ்விதம் பெருமையாக கூறுகிறார்கள். இந்த சமாதியை தர்மமேகம் என்று கூறுகிறார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்க்ள என்றால் சமாதி மழையாக தர்மத்தை அமிர்தமாக ஆயிரக்கணக்கான மழைத்துளிகளாக பொழிகிறது.
 
ஸ்லோகம்-61
இந்த நிர்விகல்ப சமாதியின் பலனாக முழமையாக சேர்த்து வைக்கப்பட்ட கர்ம பலன்களான வாசனைகளின் வலைகள் அறுக்கப்படுகிறது. பாவ-புண்ணியங்களின் கூட்டத்தோடு அறியாமையானது வேரோடு அழிக்கப்படுகிறது.
 
ஸ்லோகம்-62
பிரம்மன் இருக்கின்றது என்ற வெறும் அறிவு பரோக்ஷமானதாகும்.  பத்தாவது மனிதன் இறந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு அவன் உயிரோடு இருக்கிறான் என்ற அறிவு பரோக்ஷமானது. நீதான் அந்த மனிதன் என்ற அறிவை அடையும்போது அதுவே அபரோக்ஷமாகின்றது. பிரம்ம விஷயத்தில் பிரம்மன் இருக்கிறது என்ற அறிவு பரோக்ஷம். நானே அந்த பிரம்மன் என்று புரிந்து கொண்டிருப்பது அபரோக்ஷமாகும். பரோக்ஷ ஞானம் சிரவணம், மனனம் என்கின்ற சாதனங்களின் மூலம் அடையப்படுகிறது. சிலர் அபரோக்ஷ ஞானத்தை இந்த சானங்களின் மூலமே அடையலாம் என்று கூறுகிறார்கள். அபரோக்ஷ ஞானத்தை அடைந்தாலும் சில விபரீத ஞானத்தினால் அதன் பலனை அனுபவிக்காமல் போகலாம். நிதித்யாஸனம் இந்தத் தடைகளை நீக்க உதவுகிறது.
பரோக்ஷம் - நிபந்தனையுடன் கூடிய அறிவு
அபரோக்ஷம் - பிரதிபந்தம் இல்லாத அறிவு
 
ஸ்லோக விளக்கம்
இதற்கு முன்னால் தெளிவில்லாமல் பிரகாசித்துக் கொண்டிருந்த ஞானமானது உள்ளங்கை நெல்லிக்கனி போல தடைகள் எதுவுமில்லாமல் அபரோக்ஷமாக விளங்குகிறது.
 
ஸ்லோகம்-63
குருமுகமாக உபநிஷத் சப்த பிரமாணத்தினால் அடைந்த பிரம்மத்தைப் பற்றிய இந்த ஞானமானது, அதை அடைவதற்கு முன்னால் புத்தியினால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நெருப்பைப் போல எரித்து விடுகிறது. பாவங்கள் என்று இங்கே குறிப்பிடுவது உடலின் மீது இருக்கின்ற அபிமானம், மனதின் மீதுள்ள அபிமானம் ஆகியவையாகும்.
 
ஸ்லோகம்-64
குருமுகமாக சப்த பிரமாணத்தால் அடைந்த அபரோக்ஷ ஆத்ம ஞானமானது சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்ற அறியாமை என்ற இருமையை நீக்குகிறது.
 
ஸ்லோகம்-65
இவ்விதமாக ஆத்ம தத்துவத்தைப் பற்றி விசாரம் செய்து சாஸ்திரம் கூறியபடி மனதில் அடைந்த அறிவை நிலை நிறுத்தி சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைந்து மேலான மோட்சத்தை அடைகிறார்கள்.
 
---------------------------------------

Thursday, February 21, 2019

Nirguna Manasa Puja - Sankaracharyar

Nirguna Manasa Puja
By Sri Adi Sankaracharya,
Translated by Swami Yogananda Sarasvati
The disciple asked:
1.   In the indivisible Satchidananda whose nature is only unconditioned, and which is also the non-dual state, how is worship prescribed?
2.  Where is the invocation (avahana) of the Fullness, and the seat (asana) of the All-supporting How is there washing of the feet (padya), offering of water (arghya) and sipping (achamana) for the limpid and Pure One?
3.  How is there bathing (snana) for the Immaculate, and clothing (vasa) for the womb of the universe? How is there a sacred thread (upavita) for Him who is without lineage and caste?
4.  How is there sandal paste (gandha) for the Unattached, and flowers (pushpa) for the Odorless? What is the jewel (bhusha) of the Undifferentiated? What ornament (alamkara) for the Formless?
5.  What use of incense (dhupa) for the Spotless, or of lamps (dipa) for the Witness of everything? What is here the food-offering (naivedyam) for Him who is satiated only with His own bliss?
6.  How does one prepare betel (tambula) for the Rejoicer of the universe? He whose nature is self-luminous consciousness, that Illuminator of the sun and other stars, who is sung by `shrutis', how is there for Him the light- waving ceremony (nirajana) What circumambulation (pradakshina) for the Infinite?
7.  What prostration (pranama) for the non-dual Reality?
8.  For Him who is unknowable by the words of the Vedas, what praise (stotra) is prescribed? How is there the ceremony of dismissal (udavasana) for Him who is established inside and outside?

The Guru Replied:
9.     I worship the symbol of the Self (atmalinga) shining like a jewel and situated in the heart-lotus within the city of illusion, with the ablutions (abhisheka) of the unsullied mind from the river of faith, always, with the flowers of samadhi, for the sake of non-rebirth.
10.   “I am the One, the Ultimate”. Thus one should invoke (avahayet) Lord Siva. Then one should prepare the seat (asana) , that is thinking of the self-established Self.
11.    `I have no contact with the dust of virtue and sin.' Thus should the wise one offer washing of the fet (padya), that is such knowledge destroying all sins.
12.   One should pour forth tha handful of water which is the root- ignorance held from time without beginning. This is verily the water- offering (arghya) of the symbol of the Self.
13.   `Indra and other beings drink only the tiny fraction of a drop from the waves of the bliss ocean of Brahman.' That meditation is considered as the sipping (achamana).
14.   `All the worlds are bathed verily by the water of Brahma's bliss which is indivisible.' That meditation is the ablution (abhishechana) of the Self.
15.   `I am the light of Consciousness without any veil'. This thinking is the holy cloth (sad vastram) of the symbol of the Self. Thus should think the wise one.
16.   `I am the thread of the garland of all the worlds which are in the nature of the three gunas'. This conviction is verily considered here as the highest sacred thread (upavIta).
17.   `This manifold world mingled with numerous impressions is supported by me, and by no other'. This meditation is the sandal paste (chandana) of the Self.
18.   With the sesamum-flowers in the form of renunciation of the activity of sattva, rajas, and tamas, one should always worship (yajet) the symbol of the Self, for attaing liberation while living.
19.   With the non-dual Bel leaves devoid of the triple distinction between the Lord, the guru, and the Self, one should worship (yajet) Lord Siva that is symbol of the Self.
20.  One should think of His incense (dhupa) as the giving up of all impressions. The wise one should show the lamp (dipa) that is the realization of the luminous Self.
21.   The food-offering (naivedyam) of the symbol of the Self is the big rice pudding known as the egg-universe of Brahma. Do drink the sweet nectar of bliss that is the delightful beverage (upasechana) of Mrityu or Lord Siva.
22.  One should remember that cleansing the remnants of ignorance with the water of knowledge, is the washing of hands (hasta prakshalana) of the pure symbol of the Self.
23.  Giving up the use of the objects of passion, this is the chewing of betel (tambula) of Lord Siva, the supreme Self who is devoid of the attributes beginning with passion.
24.  Knowledge on one's own nature of Brahman, most shining, and burning to destruction the darkness of ignorance, that is here the waving of lights (nirajana) of the Self.
25.  The vision of the manifold Brahman is the ornament (alamkritam) with garlands. Then one should remember the vision of the all- blissful nature of the Self, as the handful of flowers. (pushpanjali).
26.  `Thousands of Brahma's mundane eggs revolve in me, the Lord, whose nature is immovable and steady like a heap.' This meditation is the circumambulation (pradakshina).
27.  `I am verily worthy of a universal salutation. Apart from my true Self, none is so worthy of salutation.' This reflection is verily here the salutation (vandana) of the symbol of one's own Self.
28.  The idea of the unreality of duties is termed as the saintly act (sat kriya) of the Self. Thinking of the Self as being beyond names and forms, this is the praise of his name (nama kirtana).
29.  The hearing (shravana) of that God is the thought of the unreality of things to be heard of. The reflection (manana) of the symbol of the Self is the thought of the unreality of things to be reflected on.
30.  Knowledge of the unreality of things to be contemplated upon, is the deep meditation (nididhyasana) of the Self. Devotedness to the Self by the absence of all delusion and distraction, is named the perfect steadiness (samadhi) of the Self; and not delusion of one whose mind rests on something else. This is called the eternal reposeof the mind (chitta vishranti) in Brahman itself.
31.   Thus performing till death or even for a moment this worship of the symbols of one's own Self, which is expounded according to Vedanta, one who is well concentrated should give up the illusion of all bad impressions, as dust from the feet. Having shaken off the mass of ignorance and pain, one attains the bliss of liberation



வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்

நல்வழி வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல் ,   கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான...